Picture courtesy: http://srilankabrief.org/2015/06/pre-election-political-opinion-poll-people-upbeat-under-ms-rw-rule/
சிறுவர், இளையோர், முதியவர்கள் என்று தொழில் செய்யும் குடித்தொகை மூன்றாக பிரிக்கப்படும். இளைஞர்களை நாட்டின் சொத்து என்பார்கள். வலிமையும் ஆற்றலுமாய் தொழில் செய்யும் குடித்தொகையில் அவர்களின் பங்களிப்பே தங்கி வாழும் நிலையிலுள்ள சிறுவர்களையும் முதியோரையும் பேணப் பயன்படுகிறது. முதியவர்களின் அனுபவமும் வழிகாட்டலும் இளைஞர்களில் உத்வேகமும் சரியான விகிதத்தில் சேரும்போதே ஒரு நாட்டில் முன்னேற்றம் சாத்தியமாகிறது. அவ்வகையில் இலங்கையின் குடித்தொகைக்கு தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது என்ன?
சமீப காலமாக அடிக்கடி பலரால் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக மாறியிருக்கிறது குடித்தொகை கட்டமைப்பு மாற்றம் (demographic dividend). உண்மையில் அதன் அர்த்தம் என்ன? தற்கால இலங்கைக்கு அதன் முக்கியத்துவம் என்ன? என்பதை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம்.
இலங்கை தன் தொடர்ச்சியான தூர நோக்குள்ள கொள்கைகளின் அமுல்படுத்தலாலும், குறிப்பாக சுகாதார மற்றும் கல்விச்சுட்டெண்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாகவும், சமூக பொருளாதாரத்துறையில் ஏனைய தென்னாசிய நாடுகளிலும் வேறுபட்டு முன்னிலையில் நிற்கிறது. இந்த குடித்தொகைக்கட்டமைப்பு மாற்றம் நாட்டின் குடித்தொகையில் இடம்பெறும் தொடர்ச்சியான வயதுக் கட்டமைப்பு மாற்ற செயன்முறையின் ஒரு பகுதியாகும். 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் குடித்தொகையின் 30 சதவீதத்துக்கு கீழும் 65 வயதுக்கு மேற்பட்ட வயதானோர் குடித்தொகையின் 15 சதவீதத்துக்கு கீழும் இருக்கக்கூடிய காலப்பகுதியே முதலாம் குடித்தொகை கட்டமைப்பு மாற்றமாகும். இந்தக்காலப்பகுதி நாட்டின் அபிவிருத்திக்கு மிகவும் சாதகமான காலமாகும். அதாவது ஒப்பீட்டளவில் சிறுவர்கள், முதியோரை (தங்கி வாழ்வோர்) விட உழைக்கும் குடித்தொகையின் சதவீதம் (15-60வயது) அதிகமாக காணப்படுவது பொருளாதார அபிவிருத்திக்கு வழி கோலும் ஒன்றாகும். இந்த மாற்றம் இலங்கையின் குடித்தொகைத்தரவுகள் மூலம் 2019 ஆம் ஆண்டு வரை மட்டுமே நீடித்திருக்கும் என்பதாக எதிர்வு கூறப்படுவதனால், இந்த சாதகமான இயல்பு நம்மை விட்டு நீங்கும் முன் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது புத்திசாலித்தனமானது.
அடுத்து என்ன நடக்கும்?
இலங்கையின் குடித்தொகை பற்றிய எதிர்வுகூறல்களின் படி, 2022-2062 காலப்பகுதியில் தங்கி வாழ்வோர் எண்ணிக்கை உழைக்கும் குடித்தொகையை விட அதிகரிக்கப்போவது உறுதியாகிறது. அத்தோடு வயதானோர் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டிலேயே 15% விட அதிகரிக்கப்போவதோடு அதன் பின்னரும் தொடர்ச்சியான அதிகரிக்கும் பாங்கே காணப்படும் என்று எதிர்வு கூறப்படுகிறது. உழைக்கும் குடித்தொகையை விட தங்கி வாழும் குடித்தொகை அதிகமானால், அந்நிலைமை நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாய் உருவெடுக்கும் என்பது வெளிப்படையாகும்
நாம் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
தற்போது 7.6 மில்லியன் உழைக்கும் மக்களில் 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே ஏதாவது ஒரு வகையில் ஓய்வூதியத்துக்கு தகுதியாகிறார்கள். வயதான குடித்தொகை அதிகரிப்பை எதிர்கொள்ளப்போகும் ஒரு நாட்டில் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கையை அதிகரிப்பது முதியவர் தங்கள் இறுதிக்காலத்தை மனநிம்மதியுடன் தைரியத்துடனும் கழிக்க உதவும். இதற்கு நாட்டின் சேமிப்புப்பொறிமுறையை மறுசீரமைத்தல் மிக முக்கியமானதாகும்
ஓய்வு பெறும் வயதெல்லையை 65க்கு அதிகரித்தல் மூலமாக உழைக்கும் குடித்தொகையை அதிகரிப்பதில் உள்ள சாதக பாதகங்களையும் கொள்கை வகுப்பாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஏற்கனவே சில தொழில்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உதாரணமாக பல்கலைக்கழக பேராசிரியர்கள், நீதிபதிகள் ஆகியோர் 65 வயது வரை பணி நீடிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிகளவிலான மக்கள் நீண்ட காலம் வாழப்போவதை கருத்தில் கொள்ளும் போது அனைத்து துறைகளிலும் அவ்வாறான திட்டமிடப்பட்ட பணி நீடிப்பு (60 தொடக்கம் 65 வரை) வழங்கப்படுவது சிறந்ததாகும் .
அத்தோடு பெரியோரை மதிக்கும், அவர்களை சமுதாயத்தின் சொத்தாக பேணும் பண்பினை பாடசாலை முதலே கல்வித்திட்டத்தில் இணைத்து மாணவர்களை தயார்படுத்த்துதல் போன்ற சமூகநிலை தயார்படுத்தல்களையும் நாம் செய்யவேண்டி உள்ளது.
Source: 20.4 million, UNFPA; Population and housing projections,2012- 2062, UNFPA; Department of census and statistics