பெண்கள் முன்னேற்றம் பற்றி தினம் தினம் பேசுகின்றோம். இளைய சமுதாயத்தை ஆக்கபூர்வமாக வழிநடாத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எத்தனையோ திட்டங்கள் வகுக்கிறோம் நிதிகளை ஒதுக்குகிறோம். ஆனால் இவை எல்லாம் சென்று சேரவேண்டியவர்களை சரியாக சென்றடைகின்றனவா என்பது இன்னமும் கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.
சென்றவாரம் கா.பொ. த சாதாரண தரப்பரீட்சை எழுதி விட்டு பெறுபேற்றுக்காக காத்திருந்த 15 வயது நிரம்பிய பதுளை எல்ல பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆண்குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒரு பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.அதில் இன்னும் வருந்தத்தக்க விடயம் என்னவெனில் அப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவத்தாதி ஒருவர் இந்தப்பெண்ணின் நிலை குறித்து அறிந்திருந்தும் அதை மேலதிகாரிகளுக்கு அறிவிக்கவோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலோ இருந்தமையே.
இந்த நிலைமை ஏற்படக்காரணம் என்ன?
குடும்ப வறுமை, பெற்றோரின் பேராசை, கல்வியறிவின்மை, சமூகப்பழக்கங்கள், சம்பந்தப்பட்ட பெண்களே பதின் வயதுகளில் காதல் என்று தடம்மாறுதல், பெற்றோரின் கவனிப்பின்மை, அம்மா வெளிநாட்டில் வேலை பார்த்தல், பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு ஆளாதல் என்று பல காரணங்கள் பெண்களை பதின் வயதுக்கர்ப்பங்களை நோக்கி தள்ளுகின்றன.
இலங்கையில் சராசரி பதின் வயதுக்கர்ப்ப வீதம் 6.5% உடன் வருடாந்தம் குறைந்து செல்லும் போக்கைக்காண்பித்தாலும் சில மாவட்டங்களில் ((உ +ம்: வவுனியா, திருகோணமலை, பொலன்னறுவ) அது அபாயத்துக்குரிய அளவில் வருடாந்த அதிகரிப்பையும் காண்பிப்பதால் பதின் வயதுக்கர்ப்பங்கள் இலங்கையின் முக்கியப்பிரச்சனைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
பதின் வயதுகளில் கர்ப்பமாதல் ஏன் தவறானது?
படித்துக்கொண்டிருக்கும் பெண்களின் கல்வி தடைப்படுகிறது. உரிய கல்வி இல்லையெனில் நல்ல வேலைவாய்ப்புக்களை அந்தப்பெண்ணால் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. யாரையேனும் தங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படும். இருபதுகளில் தடையின்றி படித்து தன் முழு திறமையையும் பயன்படுத்தி அந்த பெண் வாழ்க்கையில் அடையக்கூடிய நிலையிலும் மிகப்பல படிகள் கீழேயே இருக்க வேண்டி நேரிடும். முறையான கல்வியை முடித்திருக்காததால் சரியான வேலை கிடைக்காமல் மீண்டும் வறுமைக்குள் மாட்டிக்கொள்ளும் இக்கட்டு நிலை ஏற்படும்.
கல்வி அறிவு குறைந்த பெண்களிடையே தான் பதின் வயது கர்ப்பங்கள் அதிகம் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆகவே கர்ப்ப காலத்தில் தாய் சேய் உடல்நலம் பேணுதல், பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரத்தில் போதுமான அறிவு இன்மை என்பன தாய் சேய் இருவர் உடல்நலத்தையும் பாதிக்கும். பெற்றோரின் ஆதரவு இன்றி திருமணம் செய்த பதின் வயதுப்பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உண்ணவேண்டிய போஷாக்கான உணவுகள் பற்றிய போதுமான அறிவும் தயாரிக்கும் திறனும் இல்லாமல் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்! அது தவிர்த்து உயர் குருதி அழுத்தம், எடை குறைந்த குழந்தைப்பிறப்பு போன்ற பதின் வயதுக்கர்ப்பங்களுக்கே உரிய மருத்துவச்சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புண்டு.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பு தங்கள் தோற்றம் குறித்த தாழ்வுமனப்பான்மை, தங்களுக்கு நிகழும் மாற்றங்கள் குறித்த அச்சம் போன்ற உணர்வுகள் தனியாக வாழும் பதின் வயது பெண்களுக்கு கர்ப்ப காலத்தை உளவியல் ரீதியாகவும் கஷ்டமானதாக்கிவிடக்கூடும்.
மொத்தத்தில் ஒரு குழந்தை இன்னொரு குழந்தையை பெறுவது என்பது இலகுவானது அல்ல. உரியவயது வந்த பெண்களுக்கு ஏற்படும் அனுபவத்தை விட பதின் வயது கர்ப்பங்கள் உடல் உள ரீதியில் மிகமிகக் கடினமானவை
அதை விட இன்னொரு மிக முக்கியமான விடயம் இலங்கை சட்டத்தின் படி 16 வயதுக்கு குறைந்த பெண்ணொருவருடன் அவரது சம்மதத்துடனோ சம்மதமின்றியோ பாலியல் சார் உறவை வைத்திருத்தல் கற்பழிப்புக்கு சமமான தண்டனைக்குரிய குற்றமாகும்.
ஆகவே பதின் வயதுகளில் கர்ப்பமாதல் தாய்க்கும் சேய்க்கும் நிரந்தர மற்றும் குறுகியகால பாதிப்புக்களை ஏற்படுத்தும் அதேவேளை ஆரோக்கியமான இளைஞர்களின் பங்களிப்பை வளர்ச்சிக்கு வினைத்திறனாக பயன்படுத்துவதில் அவர்கள் சார்ந்த சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விடயத்தில் பெற்றோர்களுக்கும் இளையோருக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மருத்துவத்துறையினரும் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.
-தமிழ் மஞ்சரி –