பாலியல் வல்லுறவுகளும் உடல் ரீதியான பெண்களுக்கெதிரான வன்முறைகளும் மட்டுமே தலைப்புச்செய்தியை பிடிக்கும் உலகத்தில் உங்களைப்போன்ற தனித்த குடும்பப்பெண்கள் மனோரீதியாக சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் கவனத்தில் கொள்ளப்படுவதே இல்லை! கொழும்பை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தாயாரான ஷெர்ரி தன்னுடைய அனுபவங்களை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.
“விவாகரத்தான பெண்ணாக ஒரு தாயாக ஒரு வாடகை வீட்டினை பெறுவது எவ்வளவு கடினமானதாக இருக்கிறது தெரியுமா? வீட்டுக்காரரினதும் அயலவர்களினதும் ஊடுருவும் பார்வைகளுக்கு நாங்கள் திருப்திகரமாக இருக்கவேண்டும். வீட்டிற்கு ஆண் நண்பர்களோ அல்லது ஆண் உறவினரோ வருவது கேள்விக்கு அப்பாற்பட்டது. காலை ஆறுமணிக்கு முன்னர் வீட்டை விட்டு புறப்படமுடியாது. ஏழு மணிக்குப்பின் வீடு திரும்ப முடியாது. வேலை நிமித்தம் வெளியே தங்க வேண்டி ஏற்படின் கூட பாதுகாவலர் ஒருவரின் மனமற்ற அனுமதிக்காய் காத்திருக்க வேண்டும்! ஏன் விவாகரத்தான பெண்களின் ஒழுக்கத்தை குறை சொல்வது இந்த சமூகத்துக்கு இவ்வளவு எளிதாக இருக்கிறது? உங்களுக்கு கண்ணியமான குடும்பமும் அவர்கள் சரியாக வாடகை செலுத்துவதும் தானே தேவை. அதற்கு மேல் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அந்தப்பெண்ணையும் அவளை சேர்ந்தவர்களையும் கஷ்டத்துக்குள்ளாக்க என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது?
என் மகனை ஒரு பிரபல பாடசாலையில் சேர்த்திருந்தேன். ஆனால் அந்த அப்பா இல்லாத பிள்ளை என்று அதிபராலேயே அவன் விளிக்கப்பட்டதைக் கேட்டு நான் நொறுங்கித்தான் போனேன். அவன் அங்கே படித்த சில வருடங்கள் நாம் இருவருமே நாகா வேதனை அனுபவித்தோம். இறுதியில் மனதை திடப்படுத்திக்கொண்டு அவனுடைய எதிர்காலத்தை மனதில் கொண்டு அவனை அங்கிருந்து எடுத்து வேறு பாடசாலையில் சேர்த்தோம். இப்படிப்பட்ட ஆசிரியர் அதிபர்களால் எவ்வாறு ஆரோக்கியமான சமத்துவத்தை வலியுறுத்தும் இளைய சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்?
கோவில்களுக்கு வருபவர்களே..நீங்கள் கடவுளின் சந்நிதானத்துக்கு வழிபட வந்திருக்கிறீர்கள். அங்கே இருந்து கொண்டு எங்களைபோன்ற பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றி கதை பேசி எங்களை உங்கள் பார்வைகளாலும் ஒதுக்கத்தாலும் துன்புறுத்தாதீர்கள். நாங்களும் உங்களைப்போன்ற சக மனிதர்களே
திருமண வாழ்வில் இருக்கும் பெண்களே, நாங்கள் உங்கள் கணவர்களை பறித்துக்கொள்வோம் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். யோசித்துப்பாருங்கள். உங்களுக்கே இப்பேர்ப்பட்ட பயத்தைக்கொடுக்கும், உங்களுக்கே நம்பிக்கையற்ற கணவர்கள் எங்களுக்கு தேவையேயில்லை. எங்களுக்கு ஒரு தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் இருக்கிறது. உங்கள் கணவர்களை பறித்துக்கொள்ள நாங்கள் விவாகரத்து செய்யவில்லை!
தனியான பெண்கள் விரக்தியில் இருப்பார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு உதவுவது போல அவர்களை பயன்படுத்த நினைக்கும் ஆண்களே…உங்கள் வழியைப்பார்த்துப்போங்கள். உண்மையில் விரக்தியில் இருப்பதும் உதவி தேவைப்படுவதும் உங்களுக்குத்தான்!
எங்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் மக்களே கொஞ்சம் வேகமாக செயற்படுங்கள். திகைத்துப்போய் என்ன செய்வதென்று புரியாமல் குழந்தைகளுடன் தவிக்கும் பெண்கள் பலர் உண்டு. அவர்களுக்கு நம்பிக்கையையும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் தன்னம்பிக்கையையும் வழங்குவது சமூகத்தின் பொறுப்பே அன்றி வேறில்லை!”
-Sherri-