இலங்கைப்பல்கலைக்கழகங்கள் வழியாக வெளிவந்த எவருமே நம் சக வயதில் கொஞ்சம் திமிரான வெளிநபரை சந்திக்கும் போது மனதில் நினைத்துக்கொள்வது “ஒழுங்காக ராக்கிங் வாங்கி வெளியே வந்திருந்தால் இந்த திமிரெல்லாம் அடங்கியிருக்கும்” என்பதுதான் என்பதை நம்மால் மறுக்க முடியுமா?
இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இலங்கையில் பல்கலைக்கழகங்கள் ஆரம்பித்த காலந்தொட்டு இந்த பிரச்சனை இருந்துகொண்டே தான் இருக்கிறது. இலங்கையில் ராக்கிங் குறித்த முதலாவது குற்றப்பதிவு 1975ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அன்றுமுதல் இன்று வரை அதை முறையீடு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவானதே. ஆகவே பதிவு செய்யப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையை விட உண்மையில் ராக்கிங் இடம்பெறும் புள்ளிவிபரம் பலப்பல மடங்குகள் அதிகமாகும்.
ராக்கிங் என்பதற்கு பெரும்பாலான மாணவர்கள் தரும் விளக்கம் வேறு வேறு பின்னணிகளில் இருந்து வந்த மாணவர்களை அவர்களுக்குள்ளும் சிரேஷ்ட மாணவர்களுடனும் ஒற்றுமைப்படுத்தி, பல்கலைக்கழக விதிமுறைகள் எல்லாம் கற்றுத்தரும் ஒரு புனிதமான செயன்முறை என்பதே. சுருக்கமாக சொன்னால் இது ஒன்றாக கஷ்டங்களை அனுபவிக்கும் போது ஒற்றுமை அதிகரிக்கும் என்ற கொள்கை தான்.
உண்மையில் ராக்கிங்கின் போது என்ன நடைபெறுகிறது?
- இதுவரை நாம் கேட்டுக்கூடிய அறியாத ‘தூய’ சொற்களில் உங்களுக்கு யாரென்றே தெரியாதவர்களிடம் இருந்து திட்டு வாங்குதலே ராக்கிங்கின் ஆகக்குறைந்த வடிவம். இதைசெயும் சிரேஷ்ட மாணவர்களில் பெண்கள் இன்னும் டெரராக இருப்பார்கள் என்பது பொதுவான அபிப்ராயம்
- இப்போது அநேகமான பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு உடல் ரீதியான ராக்கிங் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. பெரும்பாலும் தகாதவார்த்தைகளில் திட்டுதல், அசௌகரியமாக உணரும் விஷயங்களை செய்யச்சொல்லி வற்புறுத்தல் ஆகியவையே இருக்கும், ஆனால் அவையே தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியன. சில பல்கலைக்கழகங்களில் உடல் ரீதியான ராக்கிங் கூட இருக்கிறது என்று கேள்வி
- ஆண்கள் உண்மையிலேயே பாவம் தான். அவர்களை அடித்தல், நிர்வாணப்படுத்துதல், புகைப்பழக்கம், குடி ஆகிய சகல விடயங்களுக்கும் உட்படுத்துவார்கள்
- ஆண்கள் முழு formal உடையிலும் பெண்கள் முழுநீள பாவாடை முழுக்கை சட்டை, பின்னல் என்று உடைக்கட்டுப்பாடுகளும் உண்டு. அத்துடன் ஆங்கிலத்தை அறவே பயன்படுத்த தடை போன்ற விடயங்களும் உண்டு.
- விரிவுரைகளில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது உட்பட விரிவுரையாளர்களின் தன்மை அவர்களிடம் செய்யக்கூடியன, செய்யக்கூடாதன போன்ற பெரிய லிஸ்டே மனப்பாடம் செய்யப்பட வழங்கப்படும். பகல் பொழுதுகளில் படும் கஷ்டங்களுக்கு மேலதிகமாக இரவுகளில் வீட்டில் சென்று செய்வதற்காக வீட்டுப்பாடம் மற்றும் விடுதி மாணவர்களுக்கு தொலைபேசி மூலமான ராக்கிங் இவைகளும் உண்டு.
இது பிரபல பல்கலைக்கழக மாணவி ஒருவர் தன்னால் சொல்ல முடிந்த விடயங்கள் மட்டுமே என்று சொல்லி பகிர்ந்து கொண்ட வரிசையாகும். இதை விட நமக்கு தெரியாத அசிங்கங்கள் ராக்கிங் என்ற பெயரில் இடம்பெறுவதுண்டு. ஆனால் எவ்வளவு மன அழுத்தத்துக்குள்ளானாலும் யாரேனும் மேலதிகாரி உள்நுழைந்துவிட்டால் சடாரென சூழ்நிலையை மாற்றி தாங்களே ஒன்று கூடியிருப்பது போல புதுமுக மாணவர்கள் நடித்து சிரேஷ்டர்களை காப்பாற்றி விடுவதே வழமை.
அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.
- ஒன்று மாட்டிக்கொண்டால் இதை விட மோசமான சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற பயம்
- ராக்கிங் என்ற ‘புனித’ செயன்முறையில் கொண்ட நம்பிக்கை
இந்தக்கொள்கையை ஒரு மாணவன் நம்பவில்லை ஆனாலும் அவன் பகிடிவதை எதிர்ப்பாளனாக அந்த செயன்முறையில் இருந்து விலகாமல் அந்த செயன்முறைக்கு தன்னை உட்படுத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.
- ராக்கிங் தொடர்பான தன்னுடைய கல்லூரியின் மிகச்சரியான நிலைப்பாடு குறித்த அறியாமை. விரிவுரையாளர்கள், முகாமையாளர்கள் எல்லோருமே அதே பல்கலைக்கழக மாணவர்களாக இருந்து வந்தவர்களாகத்தான் அநேகம் இருப்பார்கள். அவர்கள் வெளிப்புறமாக எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு உள்ளூர ஆதரவு தெரிவிப்பார்களோ என்ற பயம் மாணவர்களுக்கு உண்டு. ஒருவேளை தன்னுடைய அடையாளம் வெளித்தெரிந்து விட்டால் அதன்பிறகு எதிர்நோக்க வேண்டிய பிரச்சனைகளுக்கு பயந்து தான் பலர் அமைதியாக இருந்து வருகின்றனர்
- அப்படி விலகினால் அவனுடைய சக மாணவர்களிடம் இருந்து முற்றாக ஒதுக்கப்பட்டுவிடுவோம் என்ற பயம்
- சிரேஷ்ட மாணவர்களுடைய பாடக்குறிப்புக்கள், புத்தகங்கள், கற்றலில் உதவி எதுவுமே கிட்டாது என்ற பயம்
ஆனால் உண்மையில் மாணவர்கள் நம்புவதைப்போல ராக்கிங் பல்கலைக்கழகத்தின் கலாச்சாரம் தானா? வளாகத்துக்கு வெளியே உள்ள மனிதனை இதே செயன்முறைக்கு உட்படுத்தும் போது அதன் பெயர் கிரிமினல் குற்றம், வளாகத்துக்குள் மட்டும் அது எப்படி கலாச்சாரமாக முடியும்? அப்பட்டமான மனித உரிமை மீறலும், சிறப்பான புத்தாற்றல்களை வளர்த்துக்கொள்ளக்கூடிய காலப்பகுதி மன அழுத்தத்தில் வீணடிக்கப்படுதலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றே.
ராக்கிங் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது என்ற கருதுகோள் சரிதானா? அது ஒற்றுமையை விட ஆட்டுமந்தை மனோபாவத்தை உண்டுபண்ணுகிறது என்ற வாதம் சரியா தவறா?
தேவையிலுள்ள சகமனிதருக்கு உதவுதலும் அனைவரையும் அரவணைத்து செல்லுதலும் என்பது சாதாரண மனித இயல்பு. அந்த இயல்பை இந்த கொடூரமான செயன்முறை வழியாகத்தான் ஏற்படுத்த வேண்டும் என்றால் மனிதம் என்ற சொல்லுக்கு பொருளென்ன?
கொலை, தற்கொலையில் ஆரம்பித்து அங்கவீனம், மோசமான மன அழுத்தம், பல்கலைக்கழக கல்வியை இடையில் விடுதல் போன்ற கோரமுகங்கள் ராக்கிங்குக்கு உண்டு என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், பல்கலைக்கழகங்களும் அரசாங்கமும் இதைத்தடுக்க நடவடிக்கைகளை எடுத்த வண்ணமே இருக்கின்றன. ஆனாலும் ராக்கிங் குறைவதாக இல்லை.
-தொடர்ந்து பேசுவோம்-
எதற்காக ராக்கிங் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து தேவையான ஒன்றாக கருதப்படுகிறது?
ராக்கிங்கை ஒழிப்பது சாத்தியமா? பல்கலைக்கழக மட்டத்தில் ராக்கிங்கை முற்றாக இல்லாதொழிக்க என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் ஆலோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.