மனித உளநலத்தில் சமூக பங்களிப்பு

by Yamini Perera
05-Feb-2020

மனிதன் என்ற வகையில் உடல்நலம் என்பது போலவே உளநலமும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக இன்று மனிதர்களின் அன்றாட செயற்பாடுகளினால் தன் உடல் உள நலங்களை கவனித்து வருவது குறைவாக காணப்படுகிறது. உலகளவில் மனித வாழ்வில் உளநலமானது மிக முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆரோக்கியமான உடல் நலத்தை பேணுவது எந்தளவிற்கு அவசியமோ அது போன்று உள சார்ந்த விடயங்களுக்கும் நலன் காப்பது அவசியமாகும்.

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் சிறந்த ஆரோக்கியமாக வாழ உடல் ஆரோக்கியத்தை மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர் தனது உளநலத்தினையும் கண்டிப்பாக கவனம் செலுத்துதலும் முக்கியமான ஒன்றாகும். மனிதன் தனது அன்றாட வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறார். மனிதனுக்கு ஏற்படும் உள, உடல், சமூக ரீதியான தாக்கங்களினால் அவர்கள் உள ரீதியான நெருக்கீட்டுக்கு தள்ளப்படுகிறார்கள். மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை போன்ற ஆசிய நாடுகளில், மக்கள் குடும்பத்துடனும் அயலவர்களுடனும் ஒன்றித்து வாழ்தலை கலாசாரமாக கொண்டு சமூகத்துடன் ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் அதிநவீன தொழிநுட்ப சார் வாழ்க்கைக்கு அடிமைகளாகி அயலவர் யார் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வரும் சமூகமாக எமது சமூகம் மாறி வருகின்றமை கவலைக்குரியது.

இவ்வாறு தனித்து வாழ்வதனுடாக நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ள மற்றும் உதவி நாட எமக்கு ஓர் நம்பிக்கைக்குரியவர் கூட இல்லாமல் பரந்த இச் சமூகத்திலே தனித்து நின்று இன்னும் உள ரீதியாக தாக்கப்பட்டு அப்பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை ஈட்ட முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதேபோல் சிலருக்கு கடவுள், மதம் சார்ந்த நம்பிக்கைகள் இல்லாமலிருக்கலாம் ஆனால் பொதுவாக எடுத்துக்கொள்வோமானால், சமயம் சார்ந்த விடயங்களில் சிலர் ஈடுபடும் போது அவர்களின் மனதளவில் ஓர் நிம்மதி அல்லது திருப்தி ஏற்படுவதினை கவனிக்கலாம்.

இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது எமது தேவைகளை, குறைகளை, கஷ்டங்களை மற்றும் கவலைகளை நாம் கடவுளின் நம்பிக்கையில் அவனிடமே வெளிப்படுத்துகின்றோம். நீங்கள் இங்கே ஒன்றை கவனித்தீர்களா? நமது கவலைகளை, கஷ்டங்களை நாம் நம்பிக்கைக் கொள்ளும் ஒருவருடன்பகிர்ந்து கொள்ளும் போது எமது கஷ்டங்கள் கவலைகள் ஓரளவு தீர்ந்தது போல் நாம் உணர்ந்து நாம் மன நிம்மதி அடைகின்றோம். அதேபோல் தான் எமது கவலைகளை எமக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்வதனுடாக எமது கவலைகளிலிருந்து மீண்டு அவற்றுக்கு எதிராக சரியான முடிவுகளை எடுக்க எமக்கு உறுதுணையாக இருக்கும். மாறாக கவலைகளை பகிர்ந்து கொள்ளாமல் தன்னுள் அடக்கிக் கொள்வதனுடாக உளநலம் இன்னும் பாதிக்குமே ஒழிய கவலைகளுக்கு தீர்வு காண்பது கடினமாகும்

இங்கே குறிப்பிடுகின்ற விடயம் என்னவென்றால் தனித்து வாழ்வதன் மூலம் எமது கவலைகள் எம்மை இன்னும் வேதனைப்படுத்தும் அதேபோல் அவற்றுக்கு நிதானமாக சரியான தீர்மானங்கள் எடுப்பது கடினமான விடயமாகும். மேலும் தமது கவலைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தாமல் தன்னுள் அடக்கி கொள்வதனுடாக தமது தன்னம்பிக்கையினை இழக்க நேரிடுவதுடன் தவறான முடிவெடுக்கவும் தூண்டப்படுகிறார்கள். எனவே எமது கவலைகளை பகிர்ந்து கொள்ள மற்றும் எமது மனவடுவினை குறைத்துக்கொள்ள எமக்கு நம்பிக்கைக்குரியவர் ஒருவருடன் அல்லது சிலருடன் மனம்விட்டு பேச வேண்டும். அதேபோல் ஒருவர் மனவடுவினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருமிடத்து அவருடன் மனம்விட்டு பேசி அவர்களது மனவடுக்களை ஒழித்து அவர்களை சமூகத்துடன் ஒன்றாக சந்தோசமாக வாழ வழியமைப்பது சமூக அங்கத்தவர்கள் என்றடிப்படையில் நம் அனைவரினதும் சமூகம் சார்ந்த பொறுப்பாகும்.

உள ரீதியான வடுக்களுடன் தமது வாழ்க்கையினை நகர்த்தும் மக்கள் தாமாகவே முன்வந்து தமது கவலைகளை கூறி ஏனையோரின் உதவி மற்றும் உற்சாகமான வார்த்தைகளை நாடுவார்கள் என எதிர்பார்ப்பது தவறாகும். அவர்கள் தமது மன வடுக்களுக்கும் அதிகமாக சமூகம் எம்மை பற்றி என்ன சொல்வார்கள், எம்மை ஒதுக்குவார்களா, அவர்களின் சொந்த தேவைகளுக்காக எம்மீது பாசாங்கு செய்வார்களா என பல கேள்விகளுடன் நம்பிக்கையிழந்து தமது கவலைகளை பகிர்ந்துகொள்ளாமல் தனிமையில் வாழ்கின்றனர். எனவே சமூகம் என்றடிப்படையில் ஒவ்வொருவோரும் இவ்வாறு மன வடுக்களினால் தமது வாழ்க்கையினை நகர்த்தும் எமது சமூக அங்கத்தவர்களை இனங்கண்டு அவர்களது வடுக்களிலிருந்து மீண்டுவர நாம் உதவ வேண்டும். குறைந்த பட்சம் அவர்களை அணுகி அவர்களது கவலைகளில் செவிசாய்த்து எம்மால் முடியுமான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு உதவ நாம் இருக்கின்றோம் என நம்பிக்கையூட்டுங்கள்.    

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் உளநல வாழ்வினை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மேற்கொள்ளும் உளநல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Views:
1329