இலங்கையின் தற்போதைய வேலைவாய்ப்பின்றிய இளைஞர் வீதமாக 2015ஆம் ஆண்டில் 20.8 % இலங்கை புள்ளி விபரவியல் மற்றும் தொகைமதிப்பு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சதவீதமானது வேலை செய்யும் குடித்தொகைக்கு பங்களிப்பு செய்யாத 15-24 வயதுப்பிரிவினரை கொண்டே கணக்கிடப்படுகிறது. இலங்கையின் கல்வி முறையை ஆராயும்போது குறைந்தது 23 வயதில் தான் இளைஞர்கள் பாடசாலையில் உயர்தரம் முடித்தபின் தனியார் அல்லது அரச துறையில் மேற்படிப்பு எதையாவது மேற்கொண்டு வெளிவர முடிகிறது. இந்தக்காலப்பகுதியில் இளைஞர்கள் உழைக்கும் குடித்தொகைக்கு பங்களிக்க வேண்டுமெனின் வெறுமனே கல்வித்தகைமையும் வாய்ப்புக்களும் மட்டுமே இருத்தல் போதாது என்பது வெளிப்படையாகும்.
கிழக்கு மாகாணத்தின் இளையோர் கொள்கைக்கலந்துரையாடல் நிகழ்வில் பங்குபெற வந்திருந்த 24 வயதான இளம் தொழில் முனைவர் M.A. அர்ஷத் ஆரிப்பை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவருடன் பேசியபோது.
"கல்முனையை தளமாக கொண்டு நாங்கள் இந்த துறையில் இயங்க ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால் உத்தியோக பூர்வமாக நானும் என்னுடைய நண்பர்கள் நால்வரும் இணைந்து எங்களுடைய “IDEAGEEK” மென்பொருள் நிறுவனத்தை சென்ற வருடமே பதிவு செய்திருந்தோம். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப மென்பொருளை வடிவமைத்துக்கொடுப்பதே எங்களது வேலையாகும். கூடிய சீக்கிரமே எங்களது கம்பனிக்கென்றொரு கட்டிடத்தை பெற்றுக்கொண்டு அதை இன்னும் சில ஊழியர்களுடன் விரிவு படுத்தும் எண்ணத்தில் இருக்கிறோம்.
என்னுடைய அப்பாவும் அம்மாவும் அரசாங்க திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர்களாக இருந்தவர்கள். இறுதிவரை அவர்களுடைய பணியில் எந்த மாற்றத்தையும் நான் கண்டதில்லை. அதுவே ஒரு வட்டத்துக்குள் இயங்கவேண்டிய தொழில்கள் மீது என் ஆர்வத்தை குறைத்து சுயமாக இயங்கும் ஆர்வத்தை கொடுத்தது. ஆனால் என் பெற்றோர் அதை விரும்பவில்லை. அரசாங்க வேலை ஒன்றில் சேர்ந்து நிரந்தரமான வேலை ஒன்றுடன் வாழ்வதே சிறந்தது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ஆரம்ப காலங்களில் அவர்களை புரிந்துகொள்ளச்செய்வதே எங்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.
அர்ஷாத் தன்னுடைய கல்விப்பின்னணி பற்றி சொன்னபோது “நான் ஒன்றும் கல்வியில் முதல்நிலை மாணவனாக இருக்கவில்லை. ஆனால் பாடவிதானம் தவிர்ந்த பிற நிகழ்வுகளில் மிக ஆர்வமாக கலந்து கொள்வேன். பூப்பந்து விளையாட்டில் மாகாண ரீதியில் பரிசுகளை பெற்றிருக்கிறேன். இவையெல்லாம் என்னையறியாமலே என்னுள் தலைமைத்துவ பண்பையும் தன்னம்பிக்கையையும் வளர்த்திருக்க வேண்டும். உயர்தரத்தில் வர்த்தக பிரிவில் கல்வி கற்றவன் பின் மேற்படிப்பாக தகவல் தொழிநுட்பத்தில் HND படித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இரண்டு பின்புலங்களும் தான் என்னை ஒரு மென்பொருள் தொழில் முதல்வனாக மாற்றியிருக்கும்”
ஆரம்பகாலங்களில் உங்கள் தொழிலில் எப்படியான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டன..எப்படி அவற்றைக்கடந்து வந்தீர்கள் என்று கேட்டதற்கு “சிறிய வயதினர் அதுவும் பெரிதாக பிரபலமாக கம்பனி எனும் போது நாங்கள் வாடிக்கையாளர் அலுவலகங்களில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டி ஏற்பட்டது. எங்களுக்கு அனுபவம் போதாது, சரியாக செய்து முடிக்கமாட்டோம் என்ற சந்தேகத்துடனேயே அணுகப்பட்டோம், முதலீடு இருக்கவில்லை.சிறிது சிறிதாக திரட்ட வேண்டி இருந்தது. ஆனால் ஒவ்வொரு கசப்பான அனுபவங்களும் சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்ற அனுபவத்தை எங்களுக்கு கொடுத்தது. ஒரு வாடிக்கையாளனை அணுகும் போது தன்னம்பிக்கையுடனும் நிமிர்வுடனும் நேர்மையுடனும் அணுகும் போது மட்டுமே அவர் மனதில் திருப்தியை உண்டாக்க முடியும் என்பது நாங்கள் கற்ற அனுபவப்பாடமாகும். இப்போது எங்கள் வாடிக்கையாளர்களே தங்கள் நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுமளவுக்கு நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனாலும் நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது.” என்று நம்பிக்கையுடன் பேசினார் அர்ஷாத்.
“கல்லூரியில் படிக்கும் போது எனக்கு குருநாகல மாவட்டத்தில் நடைபெற்ற இளைஞர் தலைமைத்துவம் தொடர்பான இரண்டு நாள் வதிவிட கலந்தாய்வில் கலந்துகொள்ள எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதுதான் என் வாழ்வையே மாற்றியது என்று சொல்வேன். வாழ்க்கையை தனியாக தைரியமாக அணுகும் துணிச்சலை கொடுத்தது. தொழில் மற்றும் கல்விக்கு மேலதிகமாக SL Unites நிறுவனத்தின் இளைஞர் சமரச நிலையத்தின் உதவி முகாமையாளராகவும் பங்களிப்பு செய்து வருகிறேன்.” என்று சொல்லி எங்களிடமிருந்து விடைபெற்றார் அர்ஷாத்.
சுயதொழில் முனைவராக இளைஞர் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் அவர் வெறுமனே கல்வித்தகைமைகளையும் திறமையையும் கொண்டிருப்பது மட்டுமன்றி தலைமைத்துவம், இணைந்து செயற்படுதல், விட்டுக்கொடுத்தல் போன்ற மென் திறன்களையும் கொண்டவராய் இருக்க வேண்டும் என்பது அர்ஷாத்துடன் பேசியதில் தெளிவாகவே புரிகிறது. ஆகவே எட்டுக்கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல் மென்திறன்களை வளர்த்தெடுப்பதிலும் பெற்றோர் மாணவர் மற்றும் கல்வி நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
தங்களுக்கு யாராவது வேலை தரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கும் மாணவர்களை அர்ஷாத் போல துணிவும் தன்னம்பிக்கையுமாய் எப்படி மாற்றுவது என்பது மிகப்பெரும் கேள்விக்குறிதான். அரசாங்கமாக, பெற்றோராக, ஒரு சமூகமாக இதற்கு என்ன செய்ய இயலும் என எதிர்பார்க்கிறீர்கள்? எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!