இளைஞர்கள் ஒரு நாட்டின் அபிவிருத்தியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள். அவர்களின் தனித்துவமான சவால்களை அடையாளம் கண்டு அதை நீக்கி அவர்களை தங்கள் முழுத்திறனையும் பயன்படுத்த வழி செய்வது நம் அனைவரதும் தார்மீகப்பொறுப்பாகும்.
அந்த வகையில் சபரகமுவ மற்றும் தென்மாகாண சபைகளுடன்இணைந்து மாகாணங்களுக்கே உரிய தனித்துவமான இளைஞர் கொள்கை வடிவமைப்பு செயற்றிட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்த ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வடமாகாணத்திலும் அதற்கான முதற்படியாக இளைஞர் பங்காளர்களை ஒருங்கிணைத்து அப்பிரதேசத்துக்குரிய தனித்துவமான இளைஞர் சவால்கள் குறித்து முதற்கட்ட கலந்துரையாடலை நிகழ்த்தி முடித்திருந்தது
வடமாகாணம் 5 மாவட்டங்களை கொண்டது. ஐந்துமே கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த போரினால் கடுமையாக ஒவ்வொரு விதத்தில் பாதிக்கப்பட்டவையே. ஆகவே வடமாகாண இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்ற மாகாணங்களை விட சற்று மாறுபட்டவை. அவை மிகச்சரியாக அடையாளம் காணப்படுதல் முக்கியமானதாகும்.
வடமாகாண இளைஞர் கொள்கை வடிவமைப்பின் பங்காளர் கலந்துரையாடலுக்காய் யாழ்ப்பாணம் வந்திருந்த சலனி விமன்சா என்னும் இருபத்திரண்டு வயது யுவதியை கியன்னவுக்காய் சந்தித்து பேசும் வாய்ப்பு எங்களுக்கு கிட்டியது.
சலனி சொன்னதாவது
“நான் போரின் காரணமாக கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் குருநாகலில் உறவினர் வீட்டில் தனியாக தங்கியிருந்து சாதாரண தரம்வரை வலகெதர மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி கற்றேன். பிறகு உயர்தரத்துக்காக என் பெற்றோர் இருந்த வலியோயாவுக்கு மீண்டும் திரும்பி வந்து பராக்கிரமபுர மகாவித்தியாலயத்தில் இணைந்து கொண்டேன்.”
அன்றாட வேலையை மட்டுமே நம்பியிருந்த சலனியின் குடும்பத்தில் பெற்றோர், ஒரு தங்கை உயர்தரம் படிக்கும் தம்பி உள்ளடங்கலாக மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். மூன்று பேரின் பாடசாலைக்கல்விச் செலவை பூர்த்தி செய்வது அவர்களின் பொருளாதார நிலையில் மிகச்சிரமமான விடயமொன்றாயிருந்தது.
“எனக்கு ஒரு வக்கீலாக வரும் ஆசை இருந்தது. அதற்காக சிங்களம், அரசியல் விஞ்ஞானம், பொருளாதாரம் ஆகிய பாடங்களை தெரிவு செய்து கற்றேன். ஆனால் பெரும்பாலான மாணவர்களைப்போல தனியார் வகுப்புக்கு செல்ல என் குடும்ப சூழ்நிலை இடமளிக்கவில்லை. பாடசாலையிலோ தனியார் வகுப்பில் கற்பித்த பாடங்கள் தானே என்று பாடங்களை மேலோட்டமாக அணுகும் போக்கே காணப்பட்டதால் பாடசாலையை மட்டும் நம்பியிருந்த நான் பாதிக்கப்பட்டேன். என் கடுமையான முயற்சியின் காரணமாக B, S பெறுபேற்றினை பெற்றாலும் எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை” என்று சலனி வருத்தமாக தெரிவித்தாள்.
தனியார் நிறுவனங்களில் மேற்படிப்பு கற்கக்கூடிய பொருளாதார நிலை சலனிக்கு இல்லை. அவள் வீட்டில் இன்னும் பாடசாலைக்கல்வியை முடிக்கவேண்டிய இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். சிங்கள மொழியில் மேற்படிப்பு படிப்பதாயின் இவள் அனுராதபுரம் அல்லது வவுனியா சென்றாகவேண்டும். மேற்படிப்பு இல்லாத காரணத்தால் வேலையும் அவளுக்கு கிடைக்கவில்லை. இருந்தும் வீட்டுக்குள் முடங்கி விடவில்லை இந்தப்பெண்.
நான் நிச்சயம் மேற்படிப்பை முடித்து நல்ல வேளையில் ஒருநாள் அமரத்தான் போகிறேன் என்று மிகவும் நம்பிக்கையாக இருக்கிறாள். நன்றாக பாடக்கூடிய திறமை உள்ளவள். அசவத்துவேவ தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டிருக்கும் E- challengers எனப்படும் இளைஞர் கழகத்தின் துடிப்பான உறுப்பினராக தன்சக இளைஞர்களுடன் இணைந்து ஆக்கபூர்வமாக செயற்படுகிறாள்
இவளைப்போல நம் நாட்டில் அடையாளம் காணப்படாமல் தங்கள் பொருளாதாரப்பின்னணி காரணமாக நாட்டின் அபிவிருத்திக்கு கரம் கோர்க்கும் வாய்ப்பை இழந்திருக்கும் பல சலனிகள் உண்டு. இவர்களையெல்லாம் சென்று சேர்ந்து அவர்களையும் தங்கள் முழுத்திறனுடன் நாட்டின் அபிவிருத்தியில் பங்காளிகள் ஆக்கிக்கொண்டால் மட்டுமே இளைஞர்களின் உச்சபட்ச வினைத்திறனை நாடு பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இலங்கையில் சாதாரண தரப்பரீட்சை எழுதி உயர்தரப்பரீட்சைக்கு தகுதி பெறும் மாணவர்கள் 58% ஆகும். பின்னர் உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் மாணவர்கள் வெறுமனே 60% ஆகும். மீதிப்பேருக்கு சரியான வழிகாட்டலும் தகுதியான வேலைவாய்ப்பும் கிடைக்கின்றனவா என்பது பெரும் கேள்விக்குறியே.
போது நிர்வாகமும் முகாமைத்துவமும் அமைச்சு வெளியிட்ட சுற்றுநிரூபப்படி NVQ தரம் 3(National Vocational Qualifications) சான்றிதழ் ஆனது க.பொ. த சாதாரண தர சான்றிதழுக்கு சமமானது என்றும் NVQ 4 சான்றிதழ் க.பொ. தஉயர்தர சான்றிதழுக்கு சமமானது என்பதும் எத்தனை பேருக்குத்தெரியும்? குறைந்தது உங்களை சுற்றியுள்ள சமூகத்திலாவது இந்தப்பிரச்சனைக்கு தீர்வு காண நீங்கள் செய்யக்கூடியது என்ன? எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்