கொழும்பு, 2017பெப்ருவரி 27: பாலியல் துன்புறுத்தலானது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதுடன் பெண்களையும் சிறுமிகளையும் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாகுபாட்டுக்கு உட்படுத்தும் ஒரு கலாசாரத்துக்கும் வழிவகுக்கிறது. இது உலகளாவிய ரீதியில் பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையாக உள்ளது.ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இலங்கையில் பொதுப் போக்குவரத்து பஸ் வண்டிகள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90% பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 4% மானோர் மாத்திரமே பொலிஸாரிடம் உதவி வேண்டியுள்ளதை இந்த ஆய்வு வெளிக்காட்டி நிற்கின்றது. 2015 இல் UNFPA அமைப்பானது இலங்கையின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் 15-35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளிலிருந்தான 2,500 மாதிரியெடுப்புக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேசிய ஆய்வை முன்னெடுத்தது.பங்காளர் கலந்துரையாடல், பிரதான தகவலாளர் நோ்காணல்கள்,மற்றும் வினாக்கொத்து ஆய்வுகள் ஊடாக தரவுகள் சேகரிக்கப்பட்டன.
தேசிய முன்னுரிமையின் அடிப்படையில் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பிரதமர் அலுவலகம்மற்றும் இலங்கைப் பொலிஸ் என்பனவற்றுடன் இணைந்து UNFPA அமைப்பு ‘அவளின்பயணம்பாதுகாப்பானதா?’ என்ற தொனிப்பொருளிலான பொது மக்களை அறிவூட்டும் ஒரு பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. பிரச்சார நடவடிக்கையை ஆரம்பிக்குமுகமாக UNFPA கொழும்பில் ஒரு ஊடாக மாநாட்டை நடாத்தியது. இதில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அசோகா அளவத்த, பிரதமர் அலுவலக பணியாளர் தொகுதியின் பிரதித் தலைவர் திருமதி. ரோஸி சேனநாயக்க, இலங்கை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG திரு. பிரியந்த ஜயகொடி மற்றும் போக்குவரத்து அமைச்சின் உத்தியோகத்தர் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஊடக மாநாட்டில், பொதுப் போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் அதற்கான கொள்கைப் பரிந்துரைகள் உள்ளிட்ட முன்மொழிவுகளுடனான கொள்கைச் சுருக்கத்தை UNFPA வெளியிட்டுவைத்தது. UNFPA நிகழ்ச்சித்திட்ட பகுப்பாய்வாளர் திருமதி.ஷாரிகா குரே அவர்கள் ஆய்வின் பெறுபேறுகள் பற்றியதொரு விளக்கத்தை முன்வைத்தார்.மூன்று வகையான தனிநபர்கள் சாதகமான மாற்றத்துக்கு துணையாக இருக்க முடியும் என இந்த முன்வைப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அதில், 1) பாதிப்புக்கு உட்பட்டவர்– விடயத்தை எடுத்துக் கூறல் மற்றும் நடவடிக்கையெடுத்தல்; 2) பக்கத்தில் இருப்பவர்– தலையிடுதல் மற்றும் உதவி வழங்கல்; 3) தவறிழைத்தவர்– அவ்வாறான எவ்வித வன்முறைகளையும் செய்யாதிருத்தல்.
இந்த சமூகப் பிரச்சினைக்கான தீர்வுகாண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், UNFPA பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. ரிட்சு நக்கேன் அவர்கள் “பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையானது பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஒரு வடிவமாகும்.பால்நிலை அடிப்படையிலான வன்முறைப் பிரச்சினையை பரந்தமட்டத்தில் எதிர்கொள்வதற்கு சான்றுகளை அடிப்படையாகக்கொண்ட கொள்கை வகுப்புக்கான தரவுகளை நாம் நாடளாவிய ரீதியில் சேகரிக்க வேண்டும்.இந்த ஆய்வானது இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் பற்றிய தரவு சேகரிப்பதற்கானதொரு முதல் படியாகும்”.எனக் குறிப்பிட்டார்.
போக்குவரத்தில் பாலியல் ரீதியான சீண்டல்கள் பரவலாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை ஒன்றாகும். இதனால் பெண்களை குடும்பத்தினர் அனுப்பாமலிருப்பது கூட நிகழ்வது உண்மையாகும். ஒவ்வொருவரும் அசௌகரியமில்லாமல் பொதுச்சேவைகளை உபயோக்கும் உரித்துள்ளவர்கள். பொதுப்போக்குவரத்தில் பாலியல் சீண்டல்கள் முற்றாக தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உங்களிடம் ஏதேனும் யோசனைகளை உள்ளனவா? எங்களோடு பகிருங்கள்.